20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கிய கார்.. பெண் பலி.. 2 பேர் படுகாயம்

 

மேலூர் அருகே 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து நொறுங்கிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். கேட்டரிங் தொழில் நடத்தி வருபவர். இவரது மனைவி தனச்செல்வி (60). அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் (27).  இவர்கள் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்றுள்ளனர். காரை கார்த்திக் ஓட்டி சென்றுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழி சாலையின் பக்கவாட்டில் உள்ள 20 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேரும் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தனச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் கார் ஓட்டுநர் கார்த்திக் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.