கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை அப்டேட்.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்

 

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்திற்கு ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதன் காரணமாக உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. தேமுதிக தரப்பில் நவம்பர் 20 அன்று வெளியிடபட்ட அறிக்கையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்த்  உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விஜயகாந்திற்கு பொறுத்தப்பட்ட செயற்கை சுவாசக்கருவி அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் இயற்கையாக சுவாசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.