4 மாதங்களுக்கு முன்பு ரயில் முன் பாய்ந்து தம்பி தற்கொலை.. சோகத்தில் அண்ணன் விஷம் குடித்து தற்கொலை!

 

சின்னசேலத்தில் தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் ராமு (58). தையல் தொழிலாளியான இவருக்கு மகேஷ்வரன் (26), சிங்காரவேல் என்ற மகன்கள் இருந்தனர். என்ஜினீயரிங் படித்துள்ள இவர்கள், வேலை கிடைக்காததால், வீட்டில் இருந்து வந்தனர்.

இதற்கிடையே சிங்காரவேல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, அந்த பகுதியில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கடன் பிரச்சினையால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்பட்டது. தம்பியின் இழப்பு மகேஷ்வரனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. மனவிரக்தியில் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று, மகேஷ்வரன் வீட்டில் இருந்த போது விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி இருந்த அவரை, மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தந்தை ராமு கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.