சாலை விபத்தில் உயிரிழந்த காதலன்.. துக்கத்தில் காதலி தூக்குப்போட்டு தற்கொலை.. கோவையில் சோகம்!

 

கோவை அருகே சாலை விபத்தில் காதலன் உயிரிழந்ததால் காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பூங்கா நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் தர்ஷினி (21) இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் சோமனூரை அடுத்த மங்களம் பகுதியைச் சேர்ந்த திவாகர் (24) என்பவர் வேலை பார்த்து வந்தார். இதனால் அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. இதனால் அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் திவாகர், தனது நிறுவனத்தில் பணியை முடித்து விட்டு சிங்காநல்லூர் புறவழிச் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வாகனம் மீது மோட்டார் சைக்கிள் திடீரென்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த திவாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், திவாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அறிந்த தர்ஷினி கதறி துடித்தார். பின்னர் அவர் நேராக மருத்துவமனைக்கு சென்று காதலன் திவாகர் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு அங்கிருந்தவர்கள் ஆறுதல் கூறினர்.

இதையடுத்து பூங்கா நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற தர்ஷினி அழுதபடி மிகவும் கவலையுடன் இருந்து உள்ளார். பின்னர் அவர் தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.