பிளக்ஸ் போர்டில் மின்சாரம் பய்ந்து சிறுவன் பலி.. திருவாரூர் அருகே சோகம்!

 

கூத்தநல்லூர் அருகே 10-ம் வகுப்பு மாணவர் கோவில் திருவிழா பேனர் வைக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கோட்டகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அன்புச்செல்வி. இந்த தம்பதிக்கு மதன்ராஜ் (15) என்ற மகன் இருந்தார். இவர் மன்னார்குடியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், கோட்டகச்சேரி மாரியம்மன் கோவிலில் ஆனி மாத திருவிழா நடைபெற்று வந்தது. இந்த திருவிழாவிற்காக மதன்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் ரூபன் (21), சஞ்சய் (19), சித்தார்த்தன் (22) ஆகிய இளைஞர்கள் சேர்ந்து திருவிழா பேனர் வைத்துள்ளனர். அப்போது, அந்த பேனர் மேலே இருக்கும் மின் கம்பி மீது உரசியது. அதை அகற்ற முயன்றபோது, 4 பேர் மீதும் மின்சாரம் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் இளைஞர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மதன்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, மதன்ராஜ் நண்பர்களான ரூபன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற இருவர் சிறிய காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், இறந்த மதன்ராஜ் உடலை மீட்ட கூத்தாநல்லூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.