நீச்சல் பழக கிணற்றில் இறங்கிய சிறுவன் பலி.. பிளாஸ்டிக் கேன் உடைந்ததால் நீரில் மூழ்கி பலியான சோகம்!

 

திருவள்ளூர் அருகே நீச்சல் பழகுவதற்காக கிணற்றில் இறங்கிய சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சானா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் பெங்களூருவில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு க்ரிஷ் (12), சாய் (10) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் இவர்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் கடந்த சில நாட்களாக பலரும் குளித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று தனது நண்பர்களுடன் நீச்சல் பழகுவதற்காக க்ரிஷ் மற்றும் சாய் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது சாய், நீச்சல் பழக வேண்டும் என ஆசைப்பட்டதால், மற்ற நண்பர்கள் அனைவரும் அவனது முதுகில் பிளாஸ்டிக் கேன் ஒன்றைக் கட்டி கிணற்றுக்குள் இறக்கியுள்ளனர். நீச்சல் பழகிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பிளாஸ்டிக் கேன் உடைந்துள்ளது. இதனால் சிறுவன் சாய் தண்ணீரில் மூழ்கியுள்ளான்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். அவர்கள் வந்து பார்த்தபோது சாய் கிணற்றுக்குள் முழுமையாக மூழ்கி இருந்தான். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு வெளியே கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால், அதற்கு முன்பாகவே சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிப்பட்டு போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.