தீம் பார்க்கில் மூச்சுத் திணறி சிறுவன் பலி.. விடுமுறையை கொண்டாட சென்றவருக்கு நேர்ந்த சோகம்!!

 

சேலத்தில் தனியார் தீம் பார்க்கில், தண்ணீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். இவர் சொந்தமாக ஓட்டல் நடத்தி இவரது மனைவி உஷா. இந்த தம்பதிக்கு சௌடேஸ்வரன் (13), துவேஸ்வரன் (11) என இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில் கோடை விடுமுறை என்பதால் ரஞ்சித் தனது குடும்பத்துடன் நேற்று மல்லூர் அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்றார். பின்னர் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தனர். குளித்துவிட்டு மேலே வந்த மாணவன் சௌடேஸ்வரன் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. 

இதைக் கண்டு அவனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சௌடேஸ்வரனை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மல்லூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சௌடேஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீம் பார்கில் தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தபோது பாதுகாவலர்கள் இருந்தார்களா? பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை விடுமுறையை கொண்டாடச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.