சாலை தடுப்பு சுவர் மீது பைக் மோதி கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே 2 பேர் துடிதுடித்து பலி!!

 

தாராபுரம் அருகே பாலத்தின் தடுப்புச்சுவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொட்டமுத்தம்பாளையம் தெற்கு குடில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகன் ரஞ்சித்குமார் (23). தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் சோமநாதன் மகன் மனோஜ் விஸ்வநாதாச்சாரி (37). இவர்கள் இருவரும் அலங்கியம் பகுதியில் உள்ள தனியார் நுட்பாலையில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு பணி முடிந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் கொட்டமுத்தம்பாளையத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். தாராபுரம் புறவழிச் சாலையில் நஞ்சியம்பாளையம் அருகே வந்துகொண்டிருந்த போது நஞ்சியம்பாளையம் பலம் பகுதியில் வாகனம் நிலை தடுமாறி சாலை மைய தடுப்புச் சுவரின் மீது மோதியது. 

இந்த விபத்தில் தலையின் அடிபட்டு மூளை சிதறி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாராபுரம் காவல்துறை ஆய்வாளர் மணிகண்டன் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் இருவரும் அகலமான ரோட்டில் இருந்து குறுகலான ரோட்டிற்கு மாறும் போது இருசக்கர வாகனத்தை கண்ட்ரோல் செய்ய முடியாமல் சாலையின் தடுப்பு சுவரின் மைய தடுப்புச் சுவரின் மீது மோதியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.