குறை பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை.. இறந்த விரக்தியில் தந்தை தற்கொலை!

 

நாட்டறம்பள்ளி அருகே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்ததன் காரணமாக குழந்தையின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்து உள்ள மகாத்மா காந்தி தெருவில் வசித்து வந்தவர் பழனி (32). இவர், ஓசூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கும் ஏழரைபட்டி பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் காயத்ரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு காயத்ரிக்கு 7 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் சில மணி நேரத்தில் அந்த குழந்தை இறந்தது.

இதன் காரணமாக பழனி சரிவர சாப்பிடாமல், தூங்காமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனமுடைந்த பழனி நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார், பழனியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.