காதலை ஏற்க மறுத்த இளம் பெண்.. 3வது முறையாக கத்தியால் குத்திய இளைஞர்.. குமரியில் அதிர்ச்சி!

 

கன்னியாகுமரி அருகே காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணை 3வது முறையாக கத்தியால் குத்தி விட்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அன்புநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ஜெபின் (26). இவர், வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த‌தாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இளம்பெண்னின் வீட்டில் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக, புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஜெபின் மீண்டும் அந்தப் பெண்ணைச் சந்தித்து பேச முடிவு செய்தார். நேற்று அந்த இளம் பெண் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு நாகர்கோவிலில் இருந்து ஊருக்குத் திரும்பி வந்தார். தக்கலை பேருந்து நிலையத்தில் அவர் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஜெபின் வழிமறித்து, தன்னைக் காதலிக்க வற்புறுத்தி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண்ணைக் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் வருவதற்கு ஜெபின் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்நிலையில், அந்த இளம்பெண் மீட்டு கன்னியாகுமரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதே நேரத்தில், இளம்பெண்ணின் வாட்ஸ் அப்புக்கு, ஜெபின் மிரட்டல் விடுத்து வீடியோ அனுப்பியுள்ளார். இதையடுத்து, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான ஜெபினை தேடி வருகின்றனர்.