அதிவேகமாக வந்த வாகனம் மோதி இளம்பெண் பலி... செல்போனில் பேசியபடி சாலையை கடந்தபோது விபரீதம்!!

 

செல்போனில் பேசியபடி சாலையை கடந்து செல்ல முயன்ற இளம்பெண், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையை சேர்ந்தவர் சையத் நிசார். இவரது மகள் ராயிஷா தில்தார் (34). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 4 மாதங்களாக இவர், கொளத்தூரில் உள்ள தனது சித்தி வீட்டில் வசித்து வந்தார். 

இந்த நிலையில், ராயிஷா அங்குள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மாதவரம் - பாடி 200 அடி சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அவர் செல்போனில் பேசியபடி நடந்து சென்றதாக கூறப்படுகிறது. 

அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ராயிஷா தில்தார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து அருகே இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கௌசல்யா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.