உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை... 50 கிமீ தூரம் விடாமல் ஹாரனை அழுத்திய ஓட்டுநர்... அரசு மருத்துவமனையில் நேர்ந்த அவலம்!!

 

திருப்பூரில், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் சைரன் பழுதடைந்த‌தால், பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதுள்ளது. தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக குழந்தையை கோவை அழைத்துச் செல்லுமாறு பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

இதையடுத்து, பச்சிளம் குழந்தையை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், சுமார் 3 மணி நேரம் தாமதமாக ஆன்புலன்ஸ் வந்துள்ளது. தொடர்ந்து குழந்தையை அழைத்துக்கொண்டு கோவை புறப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் சைரன் ஒலிக்காத‌தால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

சைரன் இல்லாத‌தால், அந்த ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்துள்ளது. இதுகுறித்து, அவசர கட்டுப்பாட்டு அறையின் உதவியை பெற்றோர் தொலைபேசி மூலம் நாடிய போதும், கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் அலட்சியமாக பதிலளித்த‌தாக தெரிகிறது. 

இது ஒருபுறம் இருக்க, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹாரனை(Horn) அழுத்தியவாறு 50 கிலோ மீட்டர் தூரம் வண்டியை ஓட்டி, கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளார். அரசு பணியாளர்களின் அலட்சியத்தால், உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தைக்கு பல மணி நேரம் தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.