காதலனுடன் பேசிக் கொண்டிருந்த பள்ளி மாணவி.. அத்துமீறிய இளைஞர்கள்... விக்கிரவாண்டி அருகே பரபரப்பு!

 

விக்கிரவாண்டி அருகே காதலனை கத்தியால் குத்திவிட்டு 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவனும், அதே வயதுடைய சிறுமியும் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர். சிறுமி பெற்றோரை இழந்து அவரது உறவினர் கட்டுப்பாட்டில் வளர்ந்து வருகிறார். இதனிடையே, இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவனும், சிறுமியும் நேற்று (பிப். 25) இரவு விக்கிரவாண்டி அருகே உள்ள செங்கமேடு ஏரிக்கரைக்கு சென்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்தப் பகுதியில் பைக்கில் 3 பேர் வந்துள்ளனர். அங்கு இருவரும் தனியாக இருப்பதைப் பார்த்தவுடன் பைக்கில் வந்தவர்கள் இருவரையும் சுற்றி வளைத்துள்ளனர். அவர்கள் மிரட்டத் தொடங்கவே மாணவன், அவர்களைத் தட்டி கேட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மாணவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் அந்த மாணவன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளான். இதன் பின்னர் மாணவியை மிரட்டிய அவர்கள் 2 மொபைல், வெள்ளி செயின், கோலுசு, தங்க மோதிரத்தைக் கைப்பற்றிச் சென்றனர்.

அந்த மாணவியை அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து விழுப்புரம் எஸ்பி ஸ்ரீ நாதா விளக்கமளித்துள்ளார். அதாவது பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த மாணவியை மூவரில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் இருப்பினும், அந்த மாணவி அளித்த வாக்குமூலத்தின்படி அவர் பலாத்காரத்திற்கு ஆளாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு வீடு திரும்பிய அந்த மாணவி, இது குறித்து வீட்டில் தெரிவித்துள்ளார். இதனால் பதறிய அவர்கள், சிறுமியையும் உடன் இருந்த மாணவரையும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள விழுப்புரம் போலீசார், இதில் பாதிக்கப்பட்ட மாணவன்- மாணவியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களைப் பிடிக்கத் தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட மூவரைப் பிடிக்கத் தேடுதல் வேட்டையை போலீசார் தொடங்கியுள்ள நிலையில், வாகன சோதனையையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.