சாலையோரம் சென்ற வாலிபர் மீது ஏறி இறங்கிய லாரி.. பதபதைக்கும் வீடியோ!

 

சென்னையில் சாலையோரம் நடை பயிற்சி சென்ற வாலிபர் மீது லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ் (45). இவர் பரங்கிமலையில் உள்ள மிலிட்டரி கேம்பில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது தங்கை ஜெயா எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். இவரைப் பார்க்க அருள்தாஸ் நேற்று வந்துள்ளார். நேற்று இரவு அங்கேயே தங்கியிருந்த அவர் இன்று விடியற்காலை தாழங்குப்பம் சாலையில் நடை பயிற்சியில் அருள்தாஸ் ஈடுபட்டிருந்தார். 

அப்பொழுது முகத்துவார ஆற்று மேம்பாலம் வழியாக தாழம்குப்பம் நோக்கி வந்த லாரி ஒன்று அருள்தாஸ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். அருள்தாஸ் விபத்தில் இறந்த சம்பவம் கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தில் ஒன்று கூடினர். 

இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கூறி விபத்தில் சிக்கிய அருள்தாசன் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எண்ணூர் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக போராட்டக்காரர்களிடம் சமாதானம் பேசியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.