அரசு மதுபான கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் மிதந்த பல்லி.. அதிர்ச்சியில் குடிமகன்கள்!

 

பென்னாகரம் அருகே அரசு மதுபான கடையில் பீர் பாட்டிலில் பல்லி இருந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்து, கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இன்று மூன்று நண்பர்கள் 12 கிங்பிஷர் பீர் பாட்டில்களை வாங்கியுள்ளனர். இதனை எடுத்துச் சென்ற அவர்கள், பீர் பாட்டில்களை வாகனத்தில் வைக்கும் போது அதில் ஓரு பீர் பாட்டிலில் மட்டும் அளவு கம்மியாக இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அரசு மதுபான ஊழியரிடம் பீர் பாட்டிலில் மதுபானம் குறைவாக உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் அந்த பீர் பாட்டிலை மேல் நோக்கி தூக்கிப் பார்த்த பொழுது உள்ளே பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்து மதுபான கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு மதுபான கடை சற்று நேரம் மூடப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்பாரப்பட்டி போலீசார் அந்த நபர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் பல்லி இருந்த பீர் பாட்டிலை திரும்ப பெறாமலேயே அரசு மதுபான கடை ஊழியர்கள் குடிமகன்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இது மட்டுமல்லாமல் கடந்த வருடம் இதே போன்று காலாவதியான பீர்பாட்டில் இதே அரசு மதுபான கடையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்பொழுது பீர் பாட்டிலில் பல்லி இருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை இதேபோன்று இந்த கடையில் நடப்பதால் குடிமகன்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.