திடீரென மயங்கி விழுந்த அரசுப் பள்ளி மாணவி.. மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நேர்ந்த சோகம்!

 

மங்கலம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ராந்தம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் அஞ்சலை (15). இவர் மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாலையில் மாதாந்திர தேர்வு எழுதி வந்த நிலையில் மாணவி அஞ்சலை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் அவரை மீட்டு உடனடியாக மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்சு மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.

அங்கு அஞ்சலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவிக்கு ஏற்கனவே இதய கோளாறு இருந்தாகவும், அதற்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரியவந்துள்ளது.

இதனிடையே, மாணவியின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரதே பரிசோதனை அறிக்கை வந்த‌தும் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்ற போலீசார், உரிய விசாரணை நடத்துவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.