நண்பன் மறைவுச் செய்தி கேட்டு உயிர் விட்ட தோழன்.. இறப்பிலும் இணை பிரியாத நண்பர்கள்!

 

விழுப்புரம் அருகே உடல்நிலக் குறைவால் நண்பர் உயிரிழந்த செய்தியை கேட்டு மற்றொரு நண்பர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அருகாமையில் வசித்து வந்தவர் கமல்ராஜ் (43). ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரியாக உள்ள இவருக்கு, 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்காக கடந்த 3 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கமல்ராஜ் உயிரிழந்தார். இவரது உற்ற நண்பரான ஞானவேல் என்பவர் கமல்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து மிகுந்த சோகத்துடன் காணப்பட்டுள்ளார். இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவரது குடும்பத்திற்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நண்பர் கமல்ராஜ் இறந்த தகவலை அறிந்ததும் திடீரென ஞானவேலுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் இரு குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இருவரது இறுதிச் சடங்குகளும் இன்று நடைபெற உள்ளது. இறப்பிலும் இணைபிரியாத இந்த இரு நண்பர்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.