வெடித்துச் சிதறிய பட்டாசுக் கடை..  12 சிறுவன் உட்பட 2 பேர் உடல் கருகி பலியான சோகம்!

 

வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 12 வயது சிறுவன் உட்பட 2 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் 45 வயதான குமார் என்பவர் ஸ்ரீராம் என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வந்தார். இன்று காலை வழக்கம்போல கடையைத் திறந்துவைத்து அவர் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார். பொதுவாக அந்த கடையில் அப்பகுதி மக்கள் விஷேசம் உள்ளிட்ட நாட்களில் பட்டாசு வாங்கி செல்வார்கள்.

இந்த நிலையில், பட்டாசு கடையில் இன்று தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் தீ விபத்தால் கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கடையில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் 12 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்த தீ விபத்தில் சேதமதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது. மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.