லாரி மோதி வங்கி பெண் ஊழியர் உடல் நசுங்கி பலி!! கணவர் கண் முன்னே நடந்த சோகம்!

 

திருச்சியில் லாரி மோதி வங்கி பெண் ஊழியர் உடல் நசுங்கி பலியானா சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சுப்பிரமணியபுரம் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் பிரபு. இவர் கிராப்பட்டி பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியங்கா (32). இவர் கருமண்டபம் பொன்னகர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டு சென்றனர். காலை 9.30 மணிக்கு பிரபு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருச்சி மன்னார்புரம் பி அன் டி காலனி அருகே வந்தபோது, அவர்களின் பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்து இருந்த பிரியங்கா நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது டிப்பர் லாரியின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி உயிருக்கு போராடினார். பிரபு காயமின்றி உயிர் தப்பினார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் பிரியங்காவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியங்கா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு பிரபு கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர் கண் முன்னே மனைவி உடல் நசுங்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.