ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்!

 

தேனி அருகே ஒரே மரத்தில் கள்ளக்காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் அரண்மனைப் புதூர் அருகே உள்ள அய்யனார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆழ்வார். இவரது மகன் மகுடேஸ்வரன் (45). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர்.‌ மகுடேஸ்வரனின் மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன் உயிரிழந்தார்.

இந்த நிலையில், அவருக்கு ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி அமரஜோதி (40) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனியார் ஆலையில் வேலை செய்து வந்த அமரஜோதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், இன்று காலை அய்யனார்புரம்  அருகே உள்ள பள்ளப்பட்டி சாலையில் தனியார் தோட்டத்தில் மகுடேஸ்வரன் மற்றும் அமரஜோதி இருவரும் ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனிசெட்டிபட்டி போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.