தாம்பரம் அருகே திடீரென தீபற்றி எரிந்த காருக்குள் சிக்கிய தம்பதி.. நூலிழையில் உயிரை காப்பாற்றிய பொதுமக்கள்!!

 

தாம்பரம் அருகே திடீரென கார் தீ பற்றி எரிந்ததில் லேசான காயத்துடன் தம்பதியினர் உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து உள்ள சேலையூர் ரங்கனாதன் தெருவில் பாலமுருகன் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அவருடன் அவரது மனைவி அனுஷா இருந்துள்ளார். இதையடுத்து கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்த பாலமுருகன் உடனே காரை நிறுத்தியுள்ளார்.

ஆனால் கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் உடனே காரில் இருந்து வெளியே வந்துள்ளார். ஆனால் அவரது மனைவி அனுஷா காரின் கதவை திறக்க முடியாமல் மாட்டிக் கொண்டுள்ளார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் காரின் கதவை திறந்து அனுஷாவை காப்பாற்றியுள்ளது. இதில் அவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உதவியுடன் பொதுமக்கள் காரில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர். இருப்பினும் காரின் முன்பக்கம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. மேலும் காயமடைந்த அனுஷாவை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீபற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.