கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்த சோகம்!! இருவர் கைது

 

காரைக்குடி அருகே பாலியல் தொல்லையால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி, தேவகோட்டை அருகே உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தேவகோட்டையை சேர்ந்தவர் பாலகணேஷ் (19), இவர் அந்த மாணவியுடன் படித்து வந்த வகுப்பு தோழன் ஆவார். இவரும் காரைக்குடி பாரதி நகரை சேர்ந்த பசுபதியும் (22) நண்பர்கள். பாலகணேஷ் மூலமாக அவருடைய நண்பரான பசுபதியும் மாணவிக்கு அறிமுகமாகி இருக்கிறார்.

இந்த நிலையில் மாணவி, அந்த 2 பேரிடமும் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். ஆனால், நட்பை தவறாக பயன்படுத்தி அந்த 2 பேரும் பல நாட்களாக மாணவியை தனிமையில் சந்திக்க வருமாறு வற்புறுத்தி, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளதாகவும், ஆனால் மாணவி அதற்கு மறுத்து வந்ததாகவும் தெரியவருகிறது. மேலும் மாணவிக்கு 2 பேரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான அந்த மாணவி, விபரீதமாக தற்கொலை முடிவெடுத்து, எலி மருந்தை தின்றுவிட்டார். ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை அவரது குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக பசுபதி, பாலகணேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர்.