மணப்பாறை அருகே இடி தாக்கியதில் வெடித்த செல்போன்.. 3 பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்!

 

மணப்பாறை அருகே இடி தாக்கியதில் இடுப்பில் இருந்த செல்போன் வெடித்து சிதறியதால் 3 பெண்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதுமட்டுமின்றி இடியின் தாக்கமும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் மணப்பாறை அடுத்துள்ள மருங்காபுரி பகுதியைச் சேரந்த மணிமேகலை எனபவர் தனது தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருடன் முத்துலட்சுமி மற்றும் பெரியக்காள் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர்.

அப்போது பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியதை அடுத்து, வயலில் இருந்து வெளியே வர முயற்சித்த போது, மணிமேகலை இடுப்பில் செருகி வைத்திருந்த செல்போன் வெடித்துள்ளது. வெடித்ததுடன் அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதுமட்டுமின்றி இடி தாக்கியதில் முத்துலட்சுமி மற்றும் பெரியக்காள் அதே இடத்தில் மயங்கினர்.

இதன் காரணமாக மூவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தார்.

முன்னதாக நேற்று மதுரை மாட்டத்தில் உறவினர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 2 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மழை பெய்யும் நேரங்களில் பொதுமக்கள் திறந்தவெளியில் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.