தேனி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 2 பேர் பலியான சோகம்!

 

தேனி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் அக்ஜெய். இவர், காரில் தனது நண்பர்களான கோகுல் மற்றும் ஆனந்துடன் கேரளாவில் இருந்து பெரியகுளத்தை நோக்கி அதிகாலை 4.30 மணி அளவில் பயணித்துக் கொண்டிருக்கும் போது தேனி அருகே உள்ள மதுராபுரி பிரிவு தீபன் மில் அருகே எதிரே ஹாலோ பிளாக் கற்களை ஏற்றி வந்த கர்நாடகா பதிவன் கொண்ட லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

இதில் கார் முழுவதும் உருக்குலைந்த நிலையில் கரை ஓட்டி வந்த அக்ஜெய் மற்றும் உடன் பயணித்த கோகுல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆனந்த் என்பவர் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதிகாலையில் கேரள கர்நாடக வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், தேனி அல்லி நகர போலீசார் லாரி ஓட்டுநர் முருகேசனை கைது செய்து இந்த விபத்து குறித்தான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், காரை ஓட்டிவந்த, வாகன ஓட்டுநர் அக்ஜெய் ஓட்டுனர் உரிமத்தில் உள்ள முகவரியை வைத்து இறந்தவரின் குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.