லாரியை முந்த முயன்ற டூவீலர் மீது நேருக்கு நேராக மோதிய பேருந்து... 2 மாணவர்கள் பலி.. வாழப்பாடி அருகே சோகம்!

 

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் வசந்த பிரசாத் (22). இவரும், வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்த பூமலை என்பவரின் மகன் யுவராஜ் (22) என்பவரும் உடையாப்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தனர். 

நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மாலை, வாழப்பாடியில் இருந்து வைத்தியகவுண்டன்புதூரில் உள்ள யுவராஜின் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். இருசக்கர வாகனத்தை யுவராஜ் ஓட்டினார். வசந்த பிரசாத் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.

வாழப்பாடி அருகே கொட்டவாடி பிரிவு சாலை அருகே சென்ற போது, முன்னால் சென்ற லாரியை அவர்கள் முந்தி செல்ல முயன்றனர். அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாழப்பாடி போலீசார், மாணவர்கள் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.