8-வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை.. நாவலூரில் பயங்கரம்!

 

சென்னை நாவலூரில் 8வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து எட்டிப்பார்த்த 3 வயது குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நாவலூரில் ஓஎம்ஆர் சாலை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி ஜிஜி. இவர்கள் இருவரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆரவ் என்ற குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில், சிறுவனை அழைத்துக் கொண்டு கீழே வந்த தாய் ஜிஜி விளையாடியுள்ளார். பின்னர், மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது தாயும் குழந்தை ஆரவும் லிஃப்டில் சென்றுள்ளனர். அப்போது, தாய் 5 மாடியில் இறங்கிய நிலையில் ஆரவ் இறங்காமல் உள்ளேயே நின்றதால் லிஃப்ட் 8-வது மாடிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது தாயை காணவில்லை என்று பால்கனி வழியாக குழந்தை ஆரவ் எட்டிப் பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆரவ்  8-வது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனை தாய் கட்டிய அணைத்து அலறி துடித்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 8-வது மாடியில் இருந்து விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.