2 வயது குழந்தை நீர்த்தேக்கத் தொட்டியில் விழுந்து பலி.. 10 ஆண்டுகள் தவம் இருந்த பெற்ற குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!

 

திருப்பத்தூர் அருகே 2 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, நீர்த்தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி  ராதிகா. இந்த தம்பதிக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு கௌசிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது இரண்டு வயதான கௌசிகா, வீட்டில் வெளியே விளையாடி கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் முன்பு கட்டப்பட்டிருக்கும் நீர் தேக்க தொட்டியில் விழுந்துள்ளது.

பின்னர் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருதவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது எனக் கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குழந்தையை பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடல் ஒப்படைக்கப்படும் எனக் கூறினர்.

இருப்பினும் பிரேத பரிசோதனை செய்து குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்ததால், 9 வருடங்களுக்குப் பிறகு, பிறந்த குழந்தை தற்போது பிணமாகிவிட்டது என கூறி கத்தி அழுதனர். இரண்டு வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.