திருமுல்லைவாயலில் 1-ம் வகுப்பு மாணவன் பலி... சேலையில் ஊஞ்சல்கட்டி விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

 

திருமுல்லைவாயலில் வீட்டில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்து உள்ள திருமுல்லைவாயல் மூர்த்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன். இவர், தனியார் டிரால்வஸ் பேருந்தில் ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி மீனா. இந்த தம்பதிக்கு ஜஸ்வந்த் (5), மயிலேஷ் (2) என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ஜஸ்வந்த், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை நாளான நேற்று ஜஸ்வந்த் தனது தம்பியுடன் வீட்டின் மாடியில் புடவையில் ஊஞ்சல் கட்டி இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஜஸ்வந்த் கழுத்தில் புடவை சுற்றிய நிலையில் மயங்கி கீழே விழுந்துள்ளான். இதையடுத்து குழந்தையின் அலறல் சுத்தம் கேட்டு பெற்றோர் ஓடிவந்து பார்த்த போது ஜஸ்வந்த் கீழே மயங்கி நிலையில் கிடந்துள்ளான்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மயங்கிய நிலையில் இருந்த ஜஸ்வந்தை தூக்கிக்கொண்டு அம்பத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு உடனே விரைந்து சென்று அனுமதித்தனர். ஆனால், அங்கு ஜஸ்வந்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுல்லைவாயில் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 5 வயது சிறுவன் சேலையில் சிக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.