மின் வேலியில் சிக்கி 19 வயது கல்லூரி மாணவன் துடிதுடித்து பலி.. அரக்கோணம் அருகே அதிர்ச்சி!!

 

அரக்கோணம் அருகே மின் வேலியில் சிக்கி 19 வயது கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள நெல்வயல் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விகனேஷ் (19). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், அசநெல்லிப்குப்பம் பகுதியில் கோவில் திருவிழாவுக்கு தனது நண்பருடன் சென்று உள்ளார்.

நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் எதிர்பாராத விதமாக மோதியதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெமிலி போலீசார், விக்னேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக வயல்வெளி உரிமையாளர் வரதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.