16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. திருநங்கைகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை.. பரபரப்பு தீர்ப்பு

 

சேலத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு திருநங்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா நாச்சியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற காயத்திரி (23). எட்டிகுட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் என்கிற முல்லை (24). திருநங்கைகளான அவர்கள் இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.

அப்போது அவர்கள் இருவரும் ஓட்டலில் வேலை பார்த்த 16 வயது சிறுவனிடம் பிரியாணி வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு அந்த சிறுவனுக்கு திருநங்கைகள் இருவரும் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தெரியவந்ததும் சிறுவனின் தாய் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் திருநங்கைகள் காயத்திரி, முல்லை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் போலீசார் சார்பில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்து விட்டதால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக காயத்திரி, முல்லை ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.