13 வயது சிறுவன் பின் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு... சென்னை அருகே அதிர்ச்சி!

 

செங்கல்பட்டு துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது அலுமினிய குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் பாபு. இவருடைய 13 வயது மகன் அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி கொடுப்பதற்காக முடிச்சூரில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட ரைபிள் கிளப்பில் சேர்த்துவிட்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக சிறுவனுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் சிறுவன் ஈடுபட்டுள்ளார். அச்சமயம் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய அலுமினிய குண்டு இலக்கை தாக்கிவிட்டு, ஏர் கண் வெடித்து ரிட்டன் பேக் ஆகி அலுமினிய குண்டு சிறுவனின் பின் தலையில் பாய்ந்தது. இதனால் சிறுவன் வலியால் துடித்துள்ளார்.

இதனை கண்ட சிறுவனின் தந்தை காயமடைந்த சிறுவனை மீட்டு முடிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள மல்டி ஸ்பெலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பீர்க்கன்காரணை போலீசார், நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தவறுதலாக துப்பாக்கியால் சுடும் போது குண்டானது திரும்பி வந்து அவரது தலையை தாக்கியதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.