பாறை இடுக்கில் முகம் சிதைக்கப்பட்ட இளம்பெண் சடலம்... திருமணம் செய்ய வற்புறுத்தியதால் எஸ்ஐ மகன் வெறிச்செயல்!!

 

வேலூர் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  

வேலூர் மாவட்டத்தின் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் நேற்று காலை சுமார் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து, பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார், சடலமாக கிடந்த பெண்ணின் முகம் கல்லால் சிதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர் சுடிதார் அணிந்திருந்தார். கழுத்தில் தாலி இருந்தது. இதன் மூலம் அவர் திருமணம் ஆனவர் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில், அவர் யார் என்பது தெரியாததால் அவரை கொலை செய்து பாறை மேல் இருந்து தூக்கி வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டு இளம்பெண்ணின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதன்படி இதுதொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பணிப்புரியும் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு என்பவருடைய மகன் கார்த்தி (23) என்பவரை பாகாயம் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கார்த்திக்கும், சிதம்பரம் பகுதியை சேர்ந்த குணப்பிரியா என்ற பெண்ணும் ஃபேஸ்புக் மூலமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு யாருக்கும் தெரியாமல் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின்னர் குணப்பிரியா சிதம்பரத்தில் அவர் வீட்டிலேயே இருந்துள்ளார். பின்னர் 2 நாட்களுக்கு முன்பு வேலூருக்கு வந்த குணப்பிரியாவை கார்த்தி பாலமதி மலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குணப்பிரியா தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும், ஒன்றாக வாழவேண்டும் எனவும் கார்த்தியிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு கார்த்தி எதிர்ப்பு தெரிவித்து மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஏற்பட்ட தகராறில் கார்த்தி குணப்பிரியாவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் ஆத்திரம் தீராத கார்த்தி அங்கு கிடந்த கல்லை எடுத்து குணப்பிரியாவை தாக்கியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக குணப்பிரியா உயிரிழந்தார். பின்னர் கார்த்தி கல்லால் குணப்பிரியாவின் முகத்தை சிதைத்து அங்கிருந்த மலை இடுக்கு பாறையில் அவரின் சடலத்தை மறைத்து வைத்து யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்தனர்.