காதலை மறக்க முடியாமல் புதுப்பெண் தற்கொலை.. மனைவியின் பிரிவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்!!

 

செஞ்சி அருகே திருமணமான 6 நாளில் மனைவி இறந்ததால் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குந்தலம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவர் சின்னசாமி. இவரது மகன் முருகன் (30). கட்டிட தொழிலாளியான இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செவரப்பூண்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகள் சந்தியா (22) என்பவருக்கும் கடந்த 9-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் சந்தியா தனது கணவருடன் செவரப்பூண்டிக்கு விருந்துக்கு சென்றார். நேற்று முன்தினம் தாய் வீட்டில் இருந்த சந்தியா திடீரென மயங்கி விழுந்தாா். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சந்தியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையறிந்த முருகன் கதறி அழுதார். பின்னர் இரவு சொந்த ஊருக்கு சென்ற முருகன், மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் நின்ற ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவலூா்பேட்டை போலீசாா் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சோமஸ்பாடியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் ஆன நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக ஒரு மாதத்திலேயே சந்தியா தாய் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அதன்பின்னர், செவரப்பூண்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான ஏழுமலை என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், முருகனை திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு 9ம் தேதி திருமணம் நடந்துள்ளது. சந்தியாவுக்கு விருப்பம் இல்லாத நிலையில் அவரின் பெற்றோர்கள் வற்புறுத்தலால் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. சந்தியா உயிரிழந்த தகவலை அறிந்து அவருடன் தொடர்பில் இருந்த ஏழுமலை என்பவர் லாரியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 திருமணமான 6 நாளில் மனைவி இறந்ததால் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.