மர்மமான முறையில் உயிரிழந்த திருநங்கை... கொலைக்கு பெற்றோர் காரணமா?

 

திருப்பத்தூர் அருகே கோவில் திருவிழாவிற்கு வந்த திருநங்கை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி தெய்வானை. இந்த தம்பதியினரின் மகனான சந்துரு என்ற சந்திரிகா (19), ஒரு வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார். இந்நிலையில், திருநங்கையாக மாறியது சந்திரிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து குரிசிலாப்பட்டு பகுதியில் கடந்த வாரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றது.

இந்த நிலையில், தெய்வானையின் சகோதரியான முனீஸ்வரி என்பவரது வீடு குரிசிலாப்பட்டு பகுதியில் உள்ளது. தொடர்ந்து பண்டிகையை காண அவரது வீட்டிற்கு சந்திரிகா சென்றுள்ளார். ஆனால் திடீரென அவர் மாயமானார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல்போன சந்திரிகா நேற்று மர்மமான முறையில் குரிசிலாபட்டு பகுதியில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்திரிகாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்து டப்பா இருந்ததால் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.

இந்நிலையில், இந்த தகவல் அறிந்த திருநங்கைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த சந்திரிகாவின் உறவினர்களை முற்றுகையிட்டு, “சந்திரிகாவின் இறப்பிற்கு நீங்கள் தான் காரணம். உங்க வீட்டிற்கு வந்த சந்திரிகா எப்படி இறந்தார்”  என கேள்வி கேட்டனர். மேலும், சந்திரிகாவின் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து குரிசிலாப்பட்டு போலீசார் திருநங்கைகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.