பரமகுடியில் சோகம்! மாடு குறுக்கே வந்ததால் பைக்குடன் கால்வாய்க்குள் விழுந்த கர்ப்பிணி பெண் பலி!!

 

ராமநாதபுரம் அருகே மாடு குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மோட்டார் பைக்குடன் கால்வாயில் விழுந்த கர்ப்பிணி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள கோனாகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மகன் பிரபாகரன் (27). இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள எஸ்.அண்டக்குடி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பரின் மகள் சூரிய பிரியதர்ஷினி (23) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சூரிய பிரியதர்ஷினி 4 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கணவன் - மனைவி இருவரும் கடந்த 3-ம் தேதி இரவு மோட்டார் பைக்கில் அண்டக்குடி கிராமத்திலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கீழ்ப்பெருங்கரை கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டர் பைக் குறுக்கே மாடு வந்ததால், பிரபாகரனின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய பைக் அருகே இருந்த கால்வாய்க்குள் பாய்ந்தது.

இதில், கர்ப்பிணியான பிரியதர்ஷினி தண்ணீருக்குள் விழுந்தார். அவர் மீது இருசக்கர வாகனம் விழுந்ததால் மீண்டு எழமுடியாமல் நீரிலேயே மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பிரபாகரன் காயம் அடைந்து மயங்கிய நிலையில் கரையில் கிடந்தார்.

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்துள்ளார். மனைவியையும் மோட்டார் பைக்கையும் காணவில்லை என அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் தெரிவித்தார். உடனே அனைவரும் கால்வாய்க்குள் இறங்கி தேடினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சூரிய பிரியதர்ஷினியை சடலமாக மீட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரபாகரன் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். பிரியதர்ஷினியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், பிரபாகரன் - சூரியபிரியதர்ஷினி மோட்டார் பைக் சென்ற போது, மாடு குறுக்கே வந்ததால் மோட்டார் பைக் நிலைதடுமாறி கால்வாய்க்குள் பாய்ந்து விபத்து நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.