சிறுவனுக்கு நேர்ந்த சோகம்! வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பலி!

 
மதுரை அருகே வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகரில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதியினருக்கு பொன்ராம் (3) என்ற மகன் உள்ளான். தந்தை செந்தில்குமார் வேலைக்கு சென்ற நிலையில் சிறுவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது மதுரை விளாங்குடிப் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன மில் வேன் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை மதுரையை சேர்ந்த சேக் அப்துல்லா (24) என்பவர் வேனில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். வேனை ஒட்டி வந்தபோது எதிர்பாரதவிதமாக வேனின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பொன்ராம் பரிதாபமாக உயிரிழந்தான்.
வேனின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலியானதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், கூச்சலிட்டதும் தான் வேனின் ஓட்டுநர் சேக் அப்துல்லா வண்டியை நிறுத்தி பார்த்துள்ளார். அப்போதுதான் நடந்த விபரீதம் புரிந்துள்ளது.
இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயநல்லூர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அஜாக்கிரதையாக வேனை ஓட்டிய ஓட்டுநர் சேக் அப்துல்லாவை கைது செய்து சமயநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.