சோகம்! திடீர் பிரேக் அடித்த பள்ளி பேருந்து ஓட்டுநர்.. படியிலிருந்து விழுந்து சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி!
பவானி அருகே பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே குதிரைக்கல் மேடு பகுதியில் வசித்து வருபவர் மாதையன். இவரது மனைவி தங்கமணி தம்பதியினர். இந்த தம்பதியின் மூத்த மகன் திவாகர் (13). இவர், பூதபாடி அருகே உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல பள்ளி செல்வதற்காக குதிரைக்கல் மேடு பேருந்து நிறுத்ததில் வந்து பள்ளியின் பேருந்தில் ஏறி மாணவன் சென்றுள்ளார். மேலும் பள்ளி பேருந்தில் கிளீனர் இல்லாததால் முறையாக மாணவன் படிக்கட்டில் நின்று சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி பேருந்து கோடோரிபட்டு பகுதி நோக்கி சென்றபோது, ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால் படியில் நின்றிருந்த மாணவன் திவாகர் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளான். அப்போது பள்ளி பேருந்தின் பின் சக்கரம் மாணவனின் தலை மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே மாணவன் தலை நசுங்கி உயிரிழந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார், மாணவனின உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.