சோகம்! அரசு பேருந்தின் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலி!!

 

அருப்புக்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளையாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவரது மகன் மாதேஸ்வரன் (19). இவர் விருதுநகரில் உள்ள செந்தில்குமார் நாடார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் மாதேஸ்வரன் அரசு பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக அருப்புக்கோட்டையில் இருந்து கூட்டம் அதிகமாக இருந்த அரசு பேருந்தில் மாதேஸ்வரன் ஏறினார். ஆனால் அவரால் பேருந்திற்குள் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக பேருந்தின் படியில் கைப்பிடியை பிடித்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்தார்.

அப்போது பாலவநத்தம் மெயின் ரோட்டில் அரசு பேருந்து சென்றபோது படியில் நின்றிருந்த மாதேஸ்வரன் எதிர்பாராதவிதமாக தவறி நடுரோட்டில் விழுந்தார். இதில் அவரது தலையில் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரிக்கு சென்ற மாணவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.