இன்று திருமணம்... மணமகனுக்கு நேர்ந்த பரிதாபம்!! நடந்தது என்ன?

 

திருப்போரூர் அருகே இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் கஜேந்திரன். இவரது மனைவி கலா. இவர்களது மகன் ராஜ் (32). இவர் சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள எஸ்.எஸ்.என் தனியார் கல்லூரியில் மின் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், இவருக்கும் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும் இன்று (செப். 12) திருப்போரூரில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 9-ம் தேதி மணமகன் ராஜ் பணிபுரியும் கல்லூரியில் உள்ள நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழைக் கொடுத்து விட்டு தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இதில் நிலைதடுமாறிய சாலைத் தடுப்பில் மோதிய ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு ராஜ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உறவினர்கள் ராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த திருப்போரூர் போலீசார் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு ராஜின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர்.

இன்று காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் விபத்தில் மரணம் அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.