கர்ப்பிணியுடன் வந்த ஆட்டோ... அவசரம் என கூறியும் அபராதம் விதித்த டிராபிக் போலீஸ்!! வைரல் வீடியோ
நள்ளிரவில் ஆட்டோவில் கர்ப்பிணியை அழைத்து வந்த டிரைவரிடம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர், வலுக்கட்டாயமாக ரூ.1500 அபராதம் வசூல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமக்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளக் கூடாது, கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு உயர் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாலும் சில போலீசார் பொதுமக்களிடம் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், சென்னை பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு செம்பியம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இரவு 12 மணி அளவில் அந்த வழியாக மருத்துவமனைக்கு சென்று விட்டு கர்ப்பிணி மனைவி குழந்தையுடன் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அது ஒருவழிப்பாதை என்பதால் அந்த ஆட்டோவை மடக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுரளி ரூ. 1,500 அபராதம் செலுத்தி விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு, ஐயா இரவு நேரம் என்பதாலும் ஆட்டோவில் கர்ப்பிணி உள்ளதாலும் அவசரமாக செல்ல வேண்டும். மன்னித்து விடுங்கள் என ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார். ஆனால், உதவி ஆய்வாளர் பாலமுரளி தொடர்ந்து அவரிடம் வாக்குவாதம் செய்து அனுப்ப முடியாது என்று மிகவும் கோபத்தோடு பேசுகிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவை பதிவிட்ட நபர்கள் உதவி ஆய்வாளர் மதுபோதையில் இருந்ததாக கூறி பதிவிட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோவை ஷேர் செய்து பெரும்பாலானோர் கமெண்ட் செய்துள்ளனர். அதில் இரவு 12 மணிக்கு கூட “உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா... கர்ப்பிணி பெண் என்று பார்க்காமல் இவ்வாறு நடந்து கொள்கிறீர்களே. இது நியாயமா’’ என்று பதிவிட்டு வருகின்றனர்.