மனைவி இறந்த துக்கம் தாளாமல் பேருந்து டயரில் தலையை கொடுத்த கணவன்!! வெளியான அதிர்ச்சி வீடியோ

 

கடலூர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் பேருந்து டயருக்கு அடியில் தலையை வைத்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே உண்ணாமலை செட்டி சாவடி பனங்காட்டு காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் பவானி என்பவருக்கும் திருமணமாகி கௌதம் என்ற குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மனைவி, மகனோடு கடலூர் சில்வர் பீச் சென்றுள்ளார்.

அப்போது குளித்துக் கொண்டிருந்தபோது, குணசேகரன் கண்ணெதிரே பவானி கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளார். தீவிர தேடுதலுக்கு பின் பவானி சடலமாக மீட்கப்பட்டார். அப்போதிருந்தே பித்து பிடித்தது போல் சுற்றித்திருந்த குணசேகரன், சரியாக வேலைக்கும் செல்லாமல் குழந்தையையும் கவனிக்காமல் இருந்துள்ளார். இதனையறிந்த குழந்தையின் தாத்தா - பாட்டி குணசேகரனிடமிருந்து குழந்தையை அழைத்து சென்று பராமரித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் தான் கண் முன்னே மனைவியை பறிகொடுத்த விரக்தியில் தற்கொலை முடிவு எடுத்துள்ளார். கடந்த ஜனவரி 7-ம் தேதி கடலூர் சாவடி பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற தனியார் பேருந்தின் டயரில் தலையைக் கொடுக்க முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவே, குணசேகரன் காப்பாற்றப்பட்டார். அங்கிருந்தவர்களும் ஓட்டுநரும் திட்டி வீட்டுக்கு அனுப்பினர். இந்த சம்பவம் காலையில் நடந்தது.

இதோடு விடாமல் குணசேகரன் அன்று மாலையே அதே இடத்தில் வேறொரு தனியார் பேருந்து நிறுத்திவிட்டு, மூவ் ஆகும்போது பின் டயருக்கு அடியில் தலையைக் கொடுத்தார். இம்முறை யாரும் கவனிக்காததால், கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து ஏறி இறங்கியது. இதனால் அவர் தலை சிதறி அங்கேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.