தாறுமாறாக ஓடிய பேருந்து... சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உடல் நசுங்கி பலி.. தந்தை கண் முன்னே நடந்த சோகம்!!

 

தங்கையை பார்க்க வந்த இடத்தில் தந்தையின் கண்முன்னே உடல் நசுங்கி மகள் உயிரிழந்த சம்பவம் ஆரல்வாய்மொழியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். கூலித்தொழிலாளியான இவருக்கு மகராசி(22), செல்வி என்ற 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் மகராசி நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து முடித்த நிலையில், செல்வி அதே கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மதியம் ஜெயபாலும், மகராசியும் பைக்கில் செல்வியை பார்ப்பதற்காக நாகர்கோவில் புறப்பட்டனர்.

காவல்கிணறு - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், ஆரல்வாய்மொழி பகுதியில் வந்தபோது, அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் சாலையோரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் டீ குடித்ததாக கூறப்படுகிறது. அதன்பின், வாகத்தை எடுக்க நடந்து சென்றனர்.

இந்த நிலையில், எதிரே நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்து வேகமாக ஓட்டுநரின் கட்டைப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த மகராசி, ஜெயபால் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனம் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில், பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்தில் மகராசி உயிரிழந்தார்.

மேலும் ஜெயபால் லேசான காயங்களுடன்  உயிர்தப்பினார். இந்த விபத்து நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் கோபி, எஸ்ஐ ராஜமணி, ஏட்டு உதயா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் மகராசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பஸ் ஸ்டியரிங்கில் மயங்கி கிடந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பைக்கோடு இழுத்து செல்லப்பட்ட ஜெயபாலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.