கொள்ளிடம்ஆற்றில் கரை ஒதுங்கிய பச்சிளம் ஆண் குழந்தை சடலம்!! போலீசார் தீவிர விசாரணை

 

கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஒதுங்கிய பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள வாண்டையார் இருப்பு கொள்ளிடம் ஆற்று கரையோரம் பிறந்து சுமார் 4 மாதங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை உடல் சடலமாக கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது. 

இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து, திருப்பனந்தாள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  போலீசார் குழந்தையின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அந்த குழந்தை யாருடையது? என்று உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து கொள்ளிடம் ஆற்று கரையோரம் ஒதுங்கிய குழந்தையின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். 

குழந்தையின் பெற்றோர் யார்? எப்படி குழந்தை இறந்தது? குழந்தையை யாரேனும் ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்தனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்தால் முழு விவரம் தெரியும் என்பதால் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.