தனலட்சுமி என்னை வாழ விட மாட்டா! கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட ட்ராவல்ஸ் உரிமையாளர்!

 

தன்னுடைய சாவுக்கு போலீசார் சிலரும் காரணம் எனத் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சரவணசெல்வம் எழுதியிருக்கும் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் சரவணசெல்வம் (39). வாடகை கார் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு லாவண்யா என்கிற மனைவியும் ஒரு மகன், மகளும் உள்ளனர். சரவணசெல்வத்துக்கும் அவரது டிராவல்ஸ் அருகில் தையல் கடை வைத்திருக்கும் தனலட்சுமி என்பவருக்கும் சில வருடங்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இது இரண்டு குடும்பத்திற்கும் தெரிந்தே நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்பை துண்டித்துக் கொண்டனர். தனலட்சுமிக்கு சுமார் 7.50 லட்சம் வரை பணம் சரவண செல்வம் கொடுத்துள்ளதாகவும், இந்த நிலையில் அவரிடம் மேலும் பணம் கேட்டு தனலட்சுமி தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது. தன்னுடன் சரவணசெல்வம் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து தனலட்சுமி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த சரவண செல்வம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் அறை கதவு திறக்காததை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி லாவண்யா கதவைத் திறந்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை மனைவி லாவண்யா குடும்பத்தினர் கைப்பற்றி போலீசாரிடம் அளித்துள்ளனர்.

அந்த கடிதத்தில் தன் மரணத்திற்கு தனலட்சுமியும் அவரது குடும்பத்தினரும் காரணம் என்றும், மேலும் தனலட்சுமிக்கு ஆதரவாக தன் மீது பொய் வழக்கு போடும் ஸ்ரீரங்கம் உளவுத்துறை ஏட்டு திருமுருகன், எழுத்தர் முத்துசாமி, உதவி ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர் தான் என்று எழுதி வைத்திருக்கிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீசார் சரவணசெல்வத்தின் தற்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.