திருப்பூரில் பயங்கரம்.. பெண்ணின் கழுத்து நெறித்து கொலை!! 10 சவரன், ரூ. 10 லட்சம் மாயம்

 

பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் தடயங்கள் தெரியாமல் இருப்பதற்கு வீட்டில் மிளகாய் பொடியை தூவி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் அடுத்த சோளிபாளையம் ஸ்ரீனிவாசா நகரில் வசித்து வருபவர் கோபாலன் (65). இவரது மனைவி முத்துலட்சுமி (60). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி அருகே வசித்து வருகின்றனர். குமார்நகர், 60 அடி ரோட்டில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் கோபாலன், வீட்டின் இரண்டு மாடியில், 10 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். தரைத்தளத்தில் தம்பதி மட்டும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மதியம், கோபாலன் வீட்டுக்கு வந்து விட்டு பனியன் நிறுவனத்துக்கு சென்றார். மாலையில், வீட்டுக்கு திரும்பிய போது, கதவு திறக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, முத்துலட்சுமி துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து காணப்பட்டார். அந்த அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும், அந்த அறை வீட்டுக்கு வெளியே மிளகாய் பொடி துாவப்பட்டு இருந்தது.

இதையடுத்து இதுகுறித்து வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் கமிஷனர் பிரபாகரன், துணை கமிஷனர் அபினவ்குமார் மற்றும் வேலம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மூதாட்டியை கழுத்தை நெறித்து கொலை செய்து துாக்கில் தொங்க விட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனரா என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து முத்துலட்சுமி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளைக்காக நடந்த கொலையை அல்லது வேறு ஏதாவது என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இறப்பில் பல்வேறு சந்தேகம் உள்ளது. அக்கம்பக்கத்தில் ஆட்கள் உள்ள நிலையில், வெளி நபர்கள் யாராவது வந்து சென்றார்கள் என்று விசாரிக்கிறோம். அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, துாக்கில் தொங்க விடப்பட்டாரா என்பது, பிரேத பரிசோதனையில் தெரிய வரும். பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. ரூ. 10 லட்சம் மற்றும் 10 சவரன் இல்லை என்று குடும்ப தரப்பில் தெரிவித்துள்ளனர் என்று கூறினர்.