தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் மாணவர் பலி.. நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது விபரீதம்!!

 

தூத்துக்குடி அருகே உப்பாற்று ஓடையில் படகிலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ஜெனிஷ்டோ. இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, ஜெனிஷ்டோ தனது நண்பர்கள் 10 பேருடன் நேற்று இரவு சிறிய படகு மூலம் அனல் மின் நிலையம் அருகே உள்ள உப்பாற்று ஓடையில் உற்சாகமாக இருக்க சென்றுள்ளனர்.

இதில் சிறிய படகில் வைத்து நடனம் ஆடியுள்ளனர். இதில் படகு தலைகிழாக கவிழ படகில் இருந்த வாலிபர் ஜெனிஷ்டோ உள்ளிட்ட 10 பேர் உப்பாற்று ஓடையில் தவறி விழுந்துள்ளனர். இதில் 9 பேர் ஓடையில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளனர். ஆனால் உப்பாற்று ஓடையில் ஆழத்தில் சிக்கிய ஜெனிஷ்டோ மட்டும் வெளியே வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெனிஷ்டோவின் நண்பர்கள் போலீசாருக்கு புகார் அளித்தனர். இதை அடுத்து தெர்மல் நகர் போலீசார் இன்று அதிகாலை சுமார் இரண்டு மணி நேரம் உப்பாற்று ஓடை பகுதியில் சிறிய படகில் மீனவர்களுடன் சென்று வாலிபர் உடலை தேடி வந்தனர்.

இதை தொடர்ந்து முட்புதரில் சிக்கி இருந்த ஜெனிஷ்டோவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.