காரைக்குடி அருகே மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட மருமகன்!! போலீஸ் வலைவீச்சு!

 

காரைக்குடி அருகே மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் மருமகன் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் பகுதியில் வசித்து வருபவர் நாகப்பன் (55). கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ராக்கம்மாள் உள்பட 2 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் ராக்கம்மாளை ராமச்சந்திரன் (34) என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்தார். இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ராமச்சந்திரன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி ராக்கம்மாளை அடித்து துன்புறுத்துவது வாடிக்கையாக நடைபெற்று வந்ததுள்ளது. ராக்கம்மாள் இரு தினங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று மாலை ராக்கம்மாள் காரைக்குடியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று தனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூற சென்றுள்ளார்.

இது தெரியாமல் ராக்கம்மாளை தேடி அவரது தங்கை மற்றும் தந்தை இருவரும் இருவரும் ராமச்சந்திரன் வீட்டிற்குச் சென்று அவரை கண்டித்துள்ளனர். இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ராமச்சந்திரன் தனது மைத்துனியை வீட்டில் பூட்டிவிட்டு வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியால் மாமனார் நாகப்பனை சுட்டுவிட்டு தப்பி ஓடினார்.

விலா எலும்பில் குண்டு பாய்ந்த நிலையில் அலறியபடி கீழே சாய்ந்த நாகப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்றக்குடி போலீசார் காரைக்குடி டிஎஸ்பி ஆகியோர் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ராமச்சந்திரனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.