சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் திடீர் தீ விபத்து!! அதிர்ச்சி வீடியோ

 

சிவகாசியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் மீது திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பராசக்தி காலனியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி ராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்டுவதற்காக கம்புகள் கட்டி சாரம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் சாக்கு துணிகளால் ராஜகோபுரம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் திருமண நிகழ்ச்சி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது அதில் இருந்து வெளிவந்த தீப்பொறி கோவில் சாரத்தின் மீது சுற்றப்பட்டிருந்த சாக்கில் பட்டு தீப்பிடித்தது. 

இதில் கோவில் உச்சிபகுதி முழுவதும் சாரம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு படையினர் இரண்டு வாகனங்களுடன் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.