அதிர்ச்சி சம்பவம்... 3 குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்த தாய்!! 3 குழந்தைகள் பலி

 

திருவண்ணாமலை அருகே தாய் தனது 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சதாகுப்பம் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பரசுராமன் (30). இவரது மனைவி அமுதா (27). இவர்களது மகன்கள் நிலவரசு (5), குறளரசு (4). மகள் யாஷினி (7 மாதம்). இதில் நிலவரசு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில், நேற்று மதியம் அமுதா தனது மகன்களான நிலவரசு, குறளரசு மற்றும் 7 மாத கைக்குழந்தையான யாஷினி ஆகிய மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு தென்பெண்ணை ஆற்றின் கரைக்கு வந்தார். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்று கொண்டிருந்தது. அங்கு அமுதா திடீரென தனது 3 குழந்தைகளையும் துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றுக்குள் குதித்தார். பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் 3 குழந்தைகளும், அமுதாவும் மூழ்கினர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் விரைந்து வந்து தற்கொலைக்கு முயன்ற அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில் 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்நன. இதில் அமுதா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அமுதா குடும்ப தகராறு காரணமாக 3 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்தாரா? அல்லது வறுமை காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.