அதிர்ச்சி! மாற்று சமூக இளைஞரை காதலித்த மகள்.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை முயற்சி!

 

திருநெல்வேலியில் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்யாமல், காதலை மகள் கைவிடாத ஆத்திரத்தில் தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் பேச்சி. இவரது மனைவி ஆறுமுக கனி.  இந்த தம்பதிக்கு அருணா (19) என்ற மகள் உள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். டிரைவரான பேச்சி சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

அருணாவுக்கு மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவரம் தெரியவரவே  அவருக்கு திருமண முயற்சி ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த அருணா தனது காதல் விவகாரத்தை தாயிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊருக்கு வா பேசிக்கலாம் என திருநெல்வேலிக்கு அழைத்துள்ளார்.

கோவையில் இருந்து அருணா சொந்த ஊருக்கு வந்த நிலையில், அவருக்கு அவர் சார்ந்த சமூகத்தை சேர்ந்த வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க தாய் ஆறுமக கனி முடிவு செய்துள்ளார். இன்று மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருவதாக தகவல் அளித்துள்ளனர். இதனை அறிந்த அருணா தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். காதலனை தான் திருமணம் செய்துக்கொள்வேன் என சண்டையிட்டுள்ளார்.

வேறு நபருக்கு திருமணம் செய்துகொடுக்க நினைத்தால் அந்த நபரிடமே என் காதலை கூறி காதலனுடன் சென்று விடுவதாக அருணா மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமக கனி மகள் என்று பாராமல் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். கொலை சம்பவம் வெளியே தெரிந்து தாம் மாட்டிக்கொள்வோம் என நினைத்த அவர் வீட்டில் இருந்த ஹேர் டை மற்றும்  மாத்திரைகளை விழுங்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் ஆறுமுக கனியை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த அருணாவின் உடலை கைப்பற்றி சீவலப்பேரி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.